ராஜினாமா செய்ய மாட்டேன்: இலங்கை பிரதமர் உறுதி| Dinamalar

கொழும்பு-‘நான் ராஜினாமா செய்ய மாட்டேன்’ என, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு இருவருக்கும் எதிராக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபரும், பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாவது:என்னை ராஜினாமா செய்யும்படி, அதிபர் கோத்தபய கேட்கவில்லை. அதனால், பிரதமர் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன். பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, இலங்கை நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அதிபர் கோத்தபய கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், ‘நாட்டின் புத்தமத தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, நானும், பிரதமரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம். ௨௯ம் தேதி நாம் அனைவரும் சந்தித்து, அனைத்து கட்சி அரசு அமைப்பது பற்றி முடிவு செய்வோம்’ என, கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.