புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.ஆர்.பி-யை விட கூடுதல் விலைக்கு பீர், மதுபானங்களை விற்றால் உரிமம் ரத்தாகும் என்று கலால் துறை எச்சரித்துள்ளது.
புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் சுதாகர் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் கலால்துறை தாசில்தார்களுக்கு (சோதனை) பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்: மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு பீர், மதுபானங்கள் விற்பதாக புகார்கள் வந்தன. குறிப்பாக அதிகப்பட்ச சில்லரை விற்பனை விலையான எம்ஆர்பியை விட கூடுதலாக விற்கக்கூடாது.
இது கலால் விதியை மீறும் செயல். கூடுதல் விலைக்கு கடையிலுள்ள ஊழியர் ஈடுபட்டாலும் கடை உரிமதாரருக்கே இதில் முழு பொறுப்பு உண்டு. அதனால் எம்ஆர்பி-யை விட கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என்று ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மீறி கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமம் இடைநீக்கமோ, ரத்தோ செய்யப்படும். இதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கலால்துறை கருதி நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.