இனி இதுபோல் துயரம் நடக்கக் கூடாது: தலைவர்கள் அனுதாபம்

leaders condolences on Thanjavur chariot accident: தஞ்சாவூர் தேர் விபத்து போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்று கூறி, பல்வேறு தலைவர்கள் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி தேர் பவனி களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அப்பகுதியில் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ”தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில், வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும், காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: தஞ்சை சோகம்: சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் செய்தியில், ”தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன். இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தேர்பவனி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.