பலருக்கும் வீட்டினுள் வளர்க்கக்கூடிய இண்டோர் செடிகளின் (indoor plant) மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். கைக்கு அடக்கமான கப்புகளில் தொடங்கி, சிறு சிறு செடிகளில் இருந்து பெரிய செடிகள் வரை வீட்டினுள் கிடைக்கும் சிறிய இடங்களில், மேசைகளில், படிக்கும் அறைகளில் என இவற்றை வளர்க்கலாம். பார்க்க பசுமையாக, அழகாக, மனதை லேசாக்கக் கூடிய இந்த செடிகளை வளர்க்க சிறிய அளவிலான பராமரிப்பே போதும்.
என்றாலும், இண்டோர் செடிகளை கவனிக்காமல் விட்டால் சீக்கிரமே செடிகள் மடிந்துவிடும் ஆபத்தும் உள்ளது. அவற்றை எப்படி பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தண்ணீர்
வழக்கமாக மற்ற செடிகளுக்குத் தண்ணீர் விடுவதைப்போல உட்புற செடிகளுக்கு தண்ணீர் விடக்கூடாது. அதற்காக மண் வெடித்துப்போகும் அளவுக்கு தண்ணீர் விடாமலும் இருக்கக் கூடாது. செடி வைத்திருக்கும் தொட்டியில் தண்ணீர் தேங்காமல் இருக்கும்படியும், எப்போதும் ஈரப்பதத்துடன் மண் இருப்பதை போன்றும் தண்ணீர் தெளிக்க வேண்டும். அதிக தண்ணீர் ஊற்றினால் வேர் அழிந்துவிடும் ஆபத்தும் உள்ளது. ஒரு சில இண்டோர் செடிகளுக்கு எப்போதாவது தண்ணீர் விட வேண்டும். எந்தெந்த செடிக்கு எப்படி தண்ணீர் விடவேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும்.
தண்ணீரின் வெப்பநிலை
அறை வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் மிகவும் சூடாக இருந்தால் வேரை சேதப்படுத்துவதுடன், செடிகளை அழித்துவிடும். மிகவும் குளிர்ந்த தண்ணீர் தாவரத்தில் செயலற்ற தன்மையை ஏற்படுத்தும்.
தொட்டியைத் தேர்ந்தெடுத்தல்
வெளிப்புற செடிகளைப்போல உட்புற செடிகளுக்கும் தொட்டியைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். தொட்டியின் அடிப்புறத்தில் ,அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதற்கான துளைகள் உள்ளதா என்று கவனித்து வாங்க வேண்டும்.
சூரிய ஒளி
வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய செடி வகைகளுக்கு நேரடியான சூரிய வெளிச்சம் தேவையில்லை என்றாலும், மறைமுகமாக சூரிய ஒளி கிடைக்கும்படி வைப்பது நல்லது. அறையில் வெளிச்சம் இருக்கும் பக்கத்தில் வைக்கலாம். பூக்கும் தாவரங்களுக்கு ஒரு நாளைக்கு 12 – 16 மணி நேரம் வெளிச்சம் தேவை. பசுமை செடிகளுக்கு ஒரு நாளைக்கு 14 – 16 மணி நேரம் வெளிச்சம் தேவை.
இடங்கள் தேர்வு
வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளை அடிக்கடி நகர்த்தி வைக்க வேண்டாம். ஓர் இடத்தில் வைத்த செடிகள், அந்த இடத்துக்கு, வெளிச்சத்துக்கு மெதுவாகப் பழக ஆரம்பிக்கும். இடத்தை மாற்றும்போது புதிய இடத்தில் அது மீண்டும் பழக நாளாகும். குறிப்பாக, வெளிச்சமாக இருந்த இடத்தில் இருந்து நிழலான இடத்திற்கு நகர்த்திவிட வேண்டாம். சரியான அளவுக்கு ஈரப்பதம், காற்று கிடைக்குமாறு வைக்கவும்.
உரம்
மறக்காமல் உரங்களை இடவும். தேவையான நேரத்தில், செடிகளின் பிரச்னைகளுக்கு ஏற்பவோ, வளர்ச்சிக்கு ஏற்றவாரோ இயற்கை உரங்களை இட வேண்டும்.
செடிகளை வெட்டிவிடுதல்
இண்டோர் செடிகளின் வளர்ச்சியில் மிக முக்கியமானது, செடிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல், குறிப்பிட்ட இடைவெளியில் வெட்டிவிடுவது. செடிகள் அடர்ந்து, பசுமையாக வளரும். எனவே, அவற்றை வாங்கும்போதே அது குறித்தெல்லாம் கேட்டறிந்துகொள்ள வேண்டும்.
பராமரிக்க எளிதான செடி
பராமரிக்க எளிதான செடிகளை தேர்வு செய்யுங்கள். அப்போதுதான் நீண்ட நாள்களுக்கு நீடித்திருக்கும்.