‘ஹிஜாப்’ அணிவதற்கு தடை: ராணுவ பள்ளி உத்தரவுக்கு உமர் அப்துல்லா, மெகபூபா கண்டனம்

ஸ்ரீநகர் :

காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தால் நடத்தப்படும் டேக்கர் பரிவார் பள்ளி உள்ளது. அப்பள்ளியின் ஊழியர்கள், ‘ஹிஜாப்’ அணிவதை நிறுத்துமாறு பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி என்பதால், அவர்களுடன் பழக ‘ஹிஜாப்’ உடை இடையூறாக இருக்கும் என்று ராணுவ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.

இந்த சுற்றறிக்கைக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உமர் அப்துல்லா தனது பதிவில், ‘‘ஒவ்வொருவரும் தங்கள் மத பழக்கவழக்கத்தை கடைபிடிக்க உரிமை உள்ளது. கர்நாடக பாணியை காஷ்மீருக்கு கொண்டு வரும் முயற்சியை நிறுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் ஊழியர்கள் இதற்கு முன்பு எப்படி பழக முடிந்தது?’’ என்று கூறியுள்ளார்.

மெகபூபா முப்தி தனது பதிவில், ‘‘ஹிஜாப் மீது உத்தரவு பிறப்பித்த கடிதத்தை நான் கண்டிக்கிறேன். காஷ்மீர், மற்ற மாநிலங்களை போன்றது அல்ல. தங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை எங்கள் பெண்கள் விட்டுத்தர மாட்டார்கள்’’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.