“அஸ்ஸாமைத் தொடர்ந்து நாகாலாந்து, மணிப்பூரிலும் ஏ.எப்.எஸ்.பி.ஏ-வை நீக்க மத்திய செயல்படுகிறது" – மோடி

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஏ.எப்.எஸ்.பி.ஏ எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தன. 1958-ல் இந்த சட்டமானது அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் மாநிலங்களில் செயல்படும் ராணுவங்களுக்கு, சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் ஏதும் இல்லாமல் கைது செய்தல், விசாரணை நடத்துதல், சுட்டுத்தள்ளுதல் போன்ற பல சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. இந்த நிலையில், அஸ்ஸாமில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, `அஸ்ஸாமைத் தொடர்ந்து நாகாலாந்து, மணிப்பூரிலும் ஏ.எப்.எஸ்.பி.ஏ-வை நீக்க மத்திய செயல்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

அஸ்ஸாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி

அஸ்ஸாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய மோடி, “நீண்ட காலமாக, வடகிழக்கு மாநிலங்கள் பல ஏ.எப்.எஸ்.பி.ஏ-ன் கீழ் உள்ளன. ஆனால், 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் 75 சதவிகிதம் குறைந்துள்ளன. அதனால்தான் முதலில் திரிபுராவிலும், மேகாலயாவிலும் ஏ.எப்.எஸ்.பி.ஏ-ஐ எங்களால் நீக்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல், அஸ்ஸாமில் கடந்த மூன்று தசாப்தங்களாக ஏ.எப்.எஸ்.பி.ஏ நடைமுறையில் உள்ளது. எங்களுக்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் இதனை நீட்டித்துக்கொண்டே இருந்ததே இதற்குக் காரணம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில், அஸ்ஸாமின் 23 மாவட்டங்களில் ஏ.எப்.எஸ்.பி.ஏ நீக்கப்பட்டதால், தற்போது நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாக நாகாலாந்து மற்றும் மணிப்பூரிலும் இந்தச் சட்டத்தை நீக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

நாகாலாந்தில் கடந்த ஆண்டு டிசம்பரில், பாதுகாப்புப் படை தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏ.எப்.எஸ்.பி.ஏ-வை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.