விடிந்தால் தூக்குத்தண்டனை: வெளிநாட்டு தமிழருக்கு கடைசி நொடியில் கிடைத்த நம்பிக்கை


சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய தமிழரான 36 வயது தட்சிணாமூர்த்தி காத்தையா என்பவரையே போதை மருந்து கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தட்சிணாமூர்த்தி தொடர்பான வழக்கில் முன்னர் ஆஜராகி வந்த சட்டத்தரணி எம்.ரவி தெரிவிக்கையில், தமது கட்சிக்காரரின் மேல்முறையீட்டு வழக்கு மே 20ம் திகதி விசாரிக்கப்பட உள்ளதால்,
அவருக்கு வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் 13 கைதிகள் தொடர்பான ஒரு சிவில் வழக்கின் அங்கமாக தட்சிணாமூர்த்தியின் வழக்கும் உள்ளது.

குறித்தத கைதிகள் தங்களுடைய பார்வைக்கு காட்டப்படாமல் தண்டனை நிறைவேற்றம் தொடர்பான கடிதப் பரிவர்த்தனையை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு சிங்கப்பூருக்குள் சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக தட்சிணாமூர்த்தி குற்றம்சாட்டப்பட்டார்.
சக மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கம் புதன்கிழமை தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மரண தண்டனை கைதியாக சிறையில் இருந்து வந்தார்.

போதை மருந்து குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது சம்பந்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழையும்போதே அவர்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறுகிறது.

இந்த நிலையில் மலேசியரான தட்சிணாமூர்த்தி காத்தையா இறுதிக்கட்ட முயற்சியாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
காணொளி வசதி மூலம் நடைபெற உள்ள இந்த விசாரணையில், சிறையில் இருந்தபடியே பங்கேற்க உள்ளார் தட்சிணாமூர்த்தி.

இதனால், அந்த விசாரணை முடியும் முன்பு தம்மை தூக்கிலிடுவது சட்டப்படித் தவறு என வாதிட்டுள்ளார் தட்சிணாமூர்த்தி.
இதனையடுத்தே, இடைக்காக நிவாரணமாக மே 20ம் திகதி வரையில் அவரது தூக்குத்தண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.