புதுடில்லி,-நம் நாட்டில், 5 – 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்க, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று பரிந்துரைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின், ‘கோவாக்சின்’ தடுப்பூசியும், ‘சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றன.இதேபோல், 15 – 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 12 – 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, ‘பயாலஜிக்கல் – இ’ நிறுவனத்தின், ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகின்றன.கடந்த 26ம் தேதி, 5 – 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கும்; 6 – 12 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கும், அவசரகால பயன்பாட்டிற்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்தது.இதையடுத்து, 6 – 12 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று துவங்கியது.
எனினும், 5 – 12 வயதுக்கு உட்பட்டோருக்கு, கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கவில்லை.இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறுகையில், “என்.டி.ஏ.ஜி.ஐ., எனப்படும், தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்காக காத்திருக்கிறோம். ”அது கிடைத்ததும், 5 – 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்படும்,” என்றார். இதுகுறித்து முடிவெடுக்க, என்.டி.ஏ.ஜி.ஐ., அமைப்பின் குழு இன்று கூட உள்ளது.
Advertisement