ஸ்ரீநகர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நாராயண பெக்ரா. ஜம்மு காஷ்மீரில் மலை உச்சியில் உள்ள மஷீல் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையின் வீரராக பணி புரிந்து வருகிறார். இப்பகுதிக்கு போக்குவரத்து என்பதே கிடையாது. வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர், விமானங்கள் மூலம் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள். இந்நிலையில், நாராயணாவுக்கு அவரது பெற்றோர்கள் வரும் 2ம் தேதி திருமணம் நிச்சயித்துள்ளனர். ஆனால், பணிச்சுமை மற்றும் போக்குவரத்து பிரச்னை காரணமாக, தன்னால் உரிய நேரத்துக்கு வந்து தாலி கட்ட முடியுமா என்பது தெரியாது என அவர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே, நாராயணாவின் படைப்பிரிவு ஐஜி.யை தொடர்பு கொண்ட அவருடைய பெற்றோர், திருமண விவரங்களை தெரியப்படுத்தினர். பெற்றோரின் மனநிலையை புரிந்து கொண்ட ஐஜி ராஜபாபு சிங், ஸ்ரீநகரில் நிறுத்தப்பட்டிருந்த சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டரை வரவழைத்து நாராயணாவை மஷீலில் இருந்து அழைத்து வர உத்தரவிட்டார். அதன்படி, ஹெலிகாப்டர் சென்று அவரை கீழே அழைத்து வந்தது. இதனால், திருமணத்துக்காக 2,500 கி.மீ. தூரம் ஒடிசாவுக்கு பயணம் செய்ய வேண்டிய மாப்பிள்ளை, உரிய நேரத்தில் திருமணத்துக்கு செல்வது உறுதியாகி இருக்கிறது. இச்சம்பவம் எல்லை பாதுகாப்பு வீரர்கள் மத்தியில் இனிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.