இன்று இலங்கை வரலாற்றிலேயே பாரிய ஆர்ப்பாட்டமொன்று தான் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ச வெளியேற வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டு கொண்டு ஆட்சியில் தொடரப் பார்க்கிறது.
இன்று 1000இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
நாங்கள் சொல்கிறோம் உடன் வெளியேறுங்கள் என. அப்படியல்லாத பட்சத்தில் எங்களது போராட்டம் இதனை விட தீவிரமடையும்.
இன்று புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளது, முழு இலங்கையிலும் எல்லா நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன, பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன எல்லாம் மூடப்பட்டுள்ளன.
உடனடியாக அரசு வெளியேற வேண்டும், அரசு வெளியேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.