திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 3 சிறுவர் சிறுமியருக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் மேலும் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஷிகெல்லா வைரஸ் நோய் பொதுவாக அசுத்தமான குடிநீர் மூலம் பரவுகிறது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி ஆகியவைதான் இந்த நோய்க்கான முக்கிய அறிகுறிகள். இந்நிலையில், கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள எரஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு எரஞ்சிக்கல் பகுதியில் ஷிகெல்லா வைரஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு இருந்ததால் சிறுமியின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டது. அதில், சிறுமிக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியது தெரிந்தது. இதனால், எரஞ்சிக்கல் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கிடையே. பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு சிறுவன், சிறுமிக்கும் நோய் அறிகுறிகள் தென்பட்டன. இவர்களுக்கும் ஷிகெல்லா தாக்கி இருப்பது உறுதியாகி உள்ளது. 3 பேரின் உடல்நிலையும் திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.