சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரில் ஒரு சிலர் டெங்கு, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தியதால் கரோனா மிகவும் குறைவான பாதிப்பு மட்டும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐயில் கடந்த 19-ம் தேதி முதல் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐஐடி மற்றும் அதனைச் சுற்றியுள்ளவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது வரை 6,650 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3,782 பேரின் முடிவுகள் தெரியவந்துள்ளது. இதில் 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 158 பேர் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிலருக்கு வேறு சில பாதிப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒருவருக்கு டெங்கு, ஒருவருக்கு டைபாய்டு, ஒருவருக்கு அம்மை நோய், ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டைபாய்டு, அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் இன்று வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர்த்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு நோயின் தீவிரத் தன்மை மிகவும் குறைவாகதான் உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திவிட்ட காரணத்தால் யாருக்கும் பெரிய அளவு அறிகுறி இல்லை. ஒரு சிலருக்கு மட்டுமே காய்ச்சல் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.