புதுடெல்லி: நாட்டில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. புதிதாக 3,303 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 39 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் 4-வது அலை பரவுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள் ளது. ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,23,693 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை முந்தைய தினத்தைவிட 701 அதிகரித்து 16,980 ஆக உள்ளது. இது மொத்த நோயாளிகளில் 0.04 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,563 பேர் குண மடைந்துள்ளனர்.
இது வரை 4,25,28,126 பேர் குணமடைந்துள்ளனர். குண மடைந்தோர் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.66 சதவீதமாகவும் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 0.61 சதவீதமாகவும் உள்ளது.நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 188.40 கோடியை கடந்துள்ளது. கரோனா வைரஸை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 4,97,669 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்துக்குள் இருந்தது. ஆனால், சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று பல்வேறு மாநில அரசுகள் மீண்டும் அறிவித்துள்ளன. மத்திய, மாநில அரசுகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன. கரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளும் நடந்து வருகின்றன. கரோனா இன்னும் முழுமை யாக நீங்கவில்லை. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் நாட்டில் கரோனா 4-வது அலை பரவக் கூடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.