“மோடியின் ஜம்மு காஷ்மீர் விசிட் பற்றி பேச உங்களுக்கு உரிமையில்லை” – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்குச் சென்று, கிராம சபை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ரூ.20,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து, மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணத்தை விமர்சித்தது அறிக்கை ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், `அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் காஷ்மீர் மக்களை வலுவிழக்கச் செய்வதற்கும், அவர்களை வெளியேற்றுவதற்கும் அயராது சித்தாந்தப் பணியை மேற்கொண்டு வரும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆட்சியானது, ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியின் முகமாக உலகத்தின் முன் தன்னை முன்னிறுத்த முயல்வது மிகவும் கேலிக்கூத்தானது. அதுமட்டுமல்லாமல், மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணமானது, ஜம்மு காஷ்மீரில் ஓர் போலியான இயல்புநிலையைக் காட்சிப்படுத்த முயற்சிக்கும் ஓர் சூழ்ச்சியே’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தது.

மோடி

இந்த நிலையில், மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணம் குறித்த பாகிஸ்தானின் விமர்சனத்துக்கு, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதிலளித்துள்ளார்.

நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அரிந்தம் பாக்சி, “பிரதமரின் ஜம்மு காஷ்மீர் பயணம் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு, இந்தப் பயணத்தில் அவருக்கு(மோடி) கிடைத்த வரவேற்புகளும், அவர் தொடங்கிவைத்த வளர்ச்சித் திட்டங்களும், களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுமே தெளிவான பதிலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது குறித்துப் பேச பாகிஸ்தானுக்கு உரிமையில்லை” என எனக் கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.