இலங்கை சமூகத்திற்கும் உலகிற்கும் பொருந்தக்கூடிய வகையில் பட்டதாரிகளை உருவாக்குவது பல்கலைக்கழங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ,பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்புக்களின் தரத்தை விருத்தி செய்யவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்..
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பின்னர் பெரும்பாலானோர் பல்கலைக்கழக வாய்ப்பினைப் பெறுவதில்லை. நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் உயர் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளம் சந்ததியினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கோரும் அரசியல் உட்பட, அரச கட்டமைப்பின் மாற்றம் உள்ளிட்டவை என்பன அரச பல்கலைக்கழகங்களிலிருந்தே ஆரம்பிப்பதற்கான சாத்தியம் கூறுகள் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அரசியலுக்கு அப்பால் சுதந்திரமானதும் மற்றும் வெளிப்படையான சிந்தனை மற்றும் அறிவாற்றலுள்ள சமூகத்தையும் உருவாக்குவதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ,இந்த வருடத்திற்கான கல்வித் திட்டங்களை டிசெம்பர் 21ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்ய அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார். அனைத்து பரீட்சைகளும் இந்தத் தினத்திற்கு முன்னர் நிறைவு செய்யப்படும். பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஒரு மணிநேரத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் பின்னர் இந்தத் தீர்மானம் ரத்துச் செய்யப்பட்டது. மேலதிக காலம் தேவைப்பட்டால் சனிக்கிழமை நாட்களை இதற்காக பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.