தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சரத் பவார் வலியுறுத்தல்

மும்பை: கிழக்கிந்திய கம்பெனி, மராட்டியர்களுக்கு இடையே நடந்த போரின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி 2018 ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் நடைபெற்றது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.படேல் தலைமையில் நீதித்துறை ஆணையம் விசாரித்து வருகிறது. இதனிடையே வன்முறையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டினார். இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சரத் பவாரிடம் ஆணையம் கேட்டுக் கொண்டது. இதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி சரத் பவார் சார்பில் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 27-ம் தேதி ஆணையத்தில் கூடுதலாக ஒரு பிரமாண பத்திரத்தை சரத் பவார் சமர்ப்பித்தார். அதில், “தேச துரோக சட்டம் தவறுதலாக பயன் படுத்தப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமே (உபா) போது மானது” என்று தெரிவித்துள்ளார். 2 பிரமாண பத்திரம் செய்தும் சரத் பவாரிடம் நேரடியாக வாக்குமூலம் பெற ஆணையம் முடிவு செய்துள்ளது.

-பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.