"தேவர் மகன் படத்தில் நாசர் ரோல் சலீம் கவுஸ்தான் நடிக்கவேண்டியது" – நினைவுகள் பகிரும் விஜய் பாலாஜி

‘வெற்றிவிழா’, ‘சின்னக் கவுண்டர்’ உள்பட பல படங்களில் நடித்த சலீம் கவுஸ், தனது 70-வது வயதில் மும்பையில் காலமானார். ஒரு காலகட்டத்தில் தமிழில் மிக குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தனது கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர். கார்த்தியின் ‘சகுனி’ படத்தில் பிரகாஷ்ராஜின் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமாகி, நடித்து வந்தவர் சலீம் கவுஸ் தான். ‘சகுனி’யில் சலீம் கவுஸின் போர்ஷன்கள் படமாக்கப்பட்டபோது அவருடன் நடித்திருப்பவர் விஜய் பாலாஜி. பாலாஜி சக்திவேல் உள்பட பலரின் படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய்பாலாஜி, அல்லு அர்ஜூனின் ‘ஆலவைகுந்தபுரம்லு’வின் தமிழ் ரைட்டர் ஆவார். சலீம் கவுஸுடன் நடித்த நினைவுகளை இங்கே பகிர்கிறார் விஜய் பாலாஜி.

‘சகுனி’யில்

”சலீம்கவுஸ்னாலே அவர் மும்பைக்காரர்னு எல்லாரும் நினைப்பாங்க. ஆனா, அவர் நம்ம சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை எம்.சி.சி, பிரசிடென்ஸி கல்லூரிகளில் பயின்றவர். புனே திரைப்படக் கல்லூரியில் ஆக்ட்டிவ் கோர்ஸ் முடித்தவர். கே.பாலசந்தர் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்த்தைத் தேர்வு செய்ததை போல, சலீம் கவுஸுக்கும் ஆடிஷன் நடத்தியிருந்தார். ஆனால், சலீம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மீது ஈடுபாடு கொண்டு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக மாறினார்.

இந்தியாவிலேயே நடிகர்களில் சிலரின் குரல்கள் மறக்க முடியாதது. அமிதாப், அம்ரீஷ் வரிசையில் சலீம் கவுஸின் குரலும் அதிர வைக்கும். ஷேக்ஸ்பிரியரின் நாடகங்களில் அவர் வசன உச்சரிப்பு வெகு பிரபலம்னு சொல்வாங்க. இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் சாருக்கும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பிடிக்கும் என்பதால், அப்படி ஒரு நாடகத்தில் தான் சலீமை சந்தித்து ‘வெற்றி விழா’ படத்திற்கு அழைத்து வந்தார். அவரது ஜிந்தா கேரக்டர் இன்றும் பேசப்படுகிறது. அதன்பிறகு ‘சின்னக்கவுண்டர்’ படமும் அவருக்கு ஹிட் ஆனது. ரகுவரன்போல சாஃப்ட்டான ஷட்டிலான வில்லனாகவே அவர் நடிக்க விரும்பினார் . ஆனால், அவர் படங்கள் கமர்ஷியல் ஹிட் ஆகவே, தொடர்ந்து வில்லனாக நடித்தார். பரதன் மலையாளத்தில் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘தழுவம்’ படத்தின் சலீமின் கதாபாத்திரம் பேசப்பட்டது. பரதன் தமிழில் ‘தேவர் மகன்’ எடுக்கும் போதும் நாசரின் கதாபாத்திரத்திற்கு முதலில் கமிட் ஆனவர் சலீம்தான்.

காட்சி ஒன்றில்…

சலீம் கவுஸ் தான் நடிக்கும் படங்களில் சொந்தக் குரலிலேயே பேசினார். அவருக்கு தமிழ் சரளமாக பேச வராது என்றாலும் கூட, அவருடன் நான் நடித்த அனுபவத்தில் தெரிந்த ஒன்று.. இனிமையான மனிதர். படத்தில் அவர் பேச வேண்டிய டயலாக்குகளை சிரத்தையுடன் பேசி நடிப்பார். ‘சகுனி’யில் கார்த்தி, சலீம் கவுஸ் காம்பினேஷனில் நானும் நடித்திருந்தேன். ஆனால், சலீமுடன் ஏழெட்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு படத்தின் கதை மாறியதால், அவருக்கு பதிலாக பிரகாஷ் ராஜ் உள்ளே வந்தார். கார்த்தியுடன் அவர் நடித்தபோது தனது காட்சி சிறப்பாக வரவேண்டும், சக நடிகர்களும் ஸ்கோர் செய்ய வேண்டும் என்பதில் சலீம் கவுஸ் கவனமாக இருப்பார். ‘நீங்க இப்படி பேசினா சரியா இருக்கும். நான் இப்படி பேசலாமா?’ என நேர்த்தி செய்வார். அவரிடம் நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. இந்திய சினிமா ஒரு நல்ல நடிகரை இன்று இழந்திருக்கிறது” என்கிறார் விஜய் பாலாஜி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.