சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மேயர் திருமதி ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகள் 192 முதல் 200 வரை உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், பூங்காப் பணிகள், நமக்கு நாமே திட்டப் பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா,
சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளின் உதவி/இளநிலைப் பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாமன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதிக்குட்பட்ட உதவி/இளநிலைப் பொறியாளர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மண்டலக் குழுத் தலைவரின் வாயிலாக தகவல் தெரிவித்தால், அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு தகுந்த விதிமுறைகளுக்குட்பட்டு நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.