ஸ்டாலின் போல காத்திருக்கக் கூடாது; ஜூனில் உதயநிதி அமைச்சர்: தி.மு.க அதிரடி மூவ்

Arun Janardhanan

Stalin had to wait, won’t make son do; Udhayanidhi likely in Cabinet by June: திமுக எம்எல்ஏவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ஜூன் மாதத்திற்குள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை போன்ற உயர் பதவிகளுக்கு வர ஸ்டாலின் எடுத்துக் கொண்ட நீண்ட காலத்தைப் போல், உதயநிதிக்கு இருக்க கட்சியும் அதன் முதல் குடும்பமும் விரும்பவில்லை என்று திமுக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். மேலும், “ஸ்டாலின் 70 வயதில் தான் முதல்வராக பதவியேற்றார். அடுத்த தேர்தலுக்குள் அவர் 70களின் மத்தியில் வந்துவிடுவார். எனவே, உதயநிதியின் அரசியல் எதிர்காலத்தில் இப்படியொரு தவறு நடக்கக் கூடாது என்று கட்சியும், குடும்பத்தினரும் விரும்புகிறார்கள் என்றும் அந்த தலைவர் கூறினார்.

44 வயதாகும் உதயநிதி, நிலுவையில் உள்ள தனது திரைப்பட பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த கட்சி தலைவர் கூறினார். மேலும், “நெஞ்சுக்கு நீதி (ஆர்டிக்கிள் 15 இன் தமிழ் ரீமேக்) உட்பட, அவருடைய இரண்டு படங்களும் இறுதி கட்டத்தில் உள்ளன. அவர் மேலும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் அவற்றில் நடிக்க வாய்ப்பில்லை என்று அறிகிறோம்,” என்றும் அந்த தலைவர் கூறினார்.

உதயநிதி அமைச்சராவது குறித்து திமுகவின் மற்றொரு மூத்த நிர்வாகியிடம் கேட்டபோது, ​​அது நடக்க வாய்ப்புள்ளது என்றார். மேலும், “மே முதல் வாரத்தில் நாங்கள் ஒரு வருடத்தை (ஆட்சியில்) நிறைவு செய்கிறோம். உதயநிதியின் பிரவேசம் தாமதமாகிவிடக் கூடாது என்ற எண்ணம் பொதுவானதாக இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

அதேநேரம், உதயநிதி அமைச்சராக உயர்த்தப்பட்டால், அவரது இலாகா குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், தற்போதைய அமைச்சரை மாற்றாமல் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்பதால், அவரை அமைச்சரவையில் சேர்ப்பது மற்றவர்களைப் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் அந்த தலைவர் கூறினார்.

மேலும், “உதயநிதிக்கு எந்த இலாகா கொடுக்கப்பட்டாலும் அது தானாகவே வெளிச்சத்திற்கு வரும், அது பொதுமக்களின் விமர்சனத்தையும் எதிர்கொள்ளும். ஸ்டாலின் (சென்னை) மேயராக இருந்த காலம் தவிர, 2006-11 அரசாங்கத்தில் உள்ளாட்சி இலாகா தான் ஸ்டாலினுக்கு பெரிதும் உதவியது. உதயநிதிக்கும் இது போன்ற ஒரு இலாகா பரிசீலிக்கப்படுகிறது. அந்த துறை, அதிகபட்ச மக்களைச் சந்திக்க அவர் மாநிலம் முழுவதும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் துறையாக இருக்கலாம். உதயநிதி இளமையாக இருக்கிறார், அவர் தமிழகம் முழுவதும் பயணித்து மக்களைச் சந்திக்க முடியும். அவரது நல்ல செயல்திறனுடன், நிர்வாகம், நிதி, மத்திய அரசு மற்றும் அவற்றின் வளங்களைக் கையாளுதல் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்திருப்பது அவரது எதிர்காலத்திற்கு முக்கியமானது” என்றும் அந்த தலைவர் கூறினார்.

அரசியலில் உதயநிதியின் உயர்வு அவரது தாயார் துர்காவின் கனவாகவே கட்சியில் பார்க்கப்படுகிறது. உதயநிதியின் எழுச்சிக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எதுவும் இருக்காது என்று திமுக தலைமை நம்பினாலும், முக்கிய தலைவர்களில் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “குடும்பத்திற்குள் மோதல்கள் இருக்கலாம், ஆனால் பெரிதாக இருக்காது” என்றார். அவர் மேலும் கூறுகையில், “கட்சியில் கனிமொழியின் இடம் மற்றும் அதிகாரங்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளதால், அவர் எதிர்ப்பை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை.” என்றும் கூறினார்.

பல ஆதாரங்களின்படி, கடந்த ஆண்டு திமுகவின் தேர்தல் வெற்றியால் அழகிரிக்கு எதுவும் கிடைக்காததால், ஸ்டாலினின் மூத்த சகோதரரான அழகிரியின் குடும்பத்தினர் பெரும்பாலும் அதிருப்தியில் உள்ளனர். அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் சென்னையில் உள்ள உதயநிதி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளனர். அழகிரியின் குடும்பம் அதன் சிறு வணிகங்களுக்கு “குறைந்தபட்ச உதவி மற்றும் ஆதாரங்களை” பெற்று வருகிறது என்று ஒரு ஆதாரம் கூறியது.

இதையும் படியுங்கள்: பெட்ரோல், டீசல் வரி; மத்திய, மாநில அரசுகளின் பங்கு என்ன?

திருச்சியில் உள்ள சமூகப் புறக்கணிப்பு மற்றும் உள்ளடக்கிய கொள்கை ஆய்வு மையத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி ராமஜெயம் கூறுகையில், ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தாமதமான பதவி உயர்வுதான், உதயநிதி முன்கூட்டியே வருவதற்குக் காரணமாக இருக்கலாம். “அது விரைவில் நடக்க வேண்டும் என்றால், உதயநிதியை அதிக நேரம் காத்திருக்க வைத்து விடக்கூடாது என்று நினைக்கிறார்களாம். மாநில அமைச்சரவையில் அவர் விரைவில் நுழைவதால், ஸ்டாலினை விட அவர் ஒரு முன்னணி நபராக உருவாகுவார். இத்தகைய பொறுப்புகள் அவரை நிர்வாக முடிவுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகளை நன்கு அறிந்திருக்கச் செய்ய உதவும். இது அவரது வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான ஒரு வழி” என்று கூறினார்.

வாரிசு அரசியலின் குற்றச்சாட்டுகளால் கட்சி எதிர்கொள்ளக்கூடிய ஏதேனும் விமர்சனங்கள் குறித்து கேட்டதற்கு, அது சாத்தியமில்லை என்று ராமஜெயம் கூறினார். மேலும், வாரிசு அரசியல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் மக்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அது இப்போது அனைத்து அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகிக்கிறது. அல்லது, வாரிசு குடும்பங்களில் இருந்து உருவாகும் தலைவர்கள் இப்போது அடுத்த தலைமுறைத் தலைவர்களாகக் கூட பார்க்கப்படுகிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.