சர்வகட்சி அரசாங்கத்திற்கான எதிர்கால வேலைத்திட்டம் ஆரம்பம்…

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய, தற்போது சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று, (29) முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக, தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதன் முதற்கட்டமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்களிப்புடன் தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

கட்சிப் பிரதிநிதிகள் முன்வைக்கும் பொதுத் தீர்மானத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தால் தாம் அதற்கு இணங்குவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் ஐந்து பேரை பெயரிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பொதுஜன பெரமுன உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்றதன் பின்னர், முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, வாசுதேவ நாணாயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜேதாச ராஜபக்க்ஷ, திஸ்ஸ விதாரண, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, தயாசிறி ஜயசேகர, வண.அத்துரலியே ரத்தன தேரர், லசந்த அழகியவன்ன, நிமல் லன்சா, ஜயந்த

சமரவீர, ஜயரத்ன ஹேரத், டிரான் அலஸ், ஜகத் புஷ்பகுமார, நளின் பெர்னாண்டோ, எம்.எம். அதாவுல்லா, கெவிந்து குமாரதுங்க, வீரசுமன வீரசிங்ஹ மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

29.04.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.