இந்திய மாணவர்களுக்கு அனுமதி: சீனா முடிவு| Dinamalar

பீஜிங்: சீனாவில் படித்து, கொரோனா காரணமாக 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். படிப்பை தொடர்வதற்கு சீனா திரும்பி செல்வதில், அவர்கள் பல சிக்கல்களை சந்தித்த வந்த நிலையில், மாணவர்கள் பலருக்கு விசா வழங்க சீனா முன்வந்துள்ளது.

இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், படிப்பை தொடர சீனா திரும்புவதில் இந்திய மாணவர்களுக்கு உள்ள கவலை மற்றும் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மற்ற நாட்டு மாணவர்கள், சீனா திரும்புவதற்கான நடைமுறைகள் மற்றும் அனுபவத்தை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம். அதேநேரத்தில், இந்திய மாணவர்கள் சீனா திரும்புவதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. சீனாவிற்கு திரும்ப யார் உண்மையில் அக்கறை கொண்டுள்ளனர் என்ற பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம்.

ஏராளமான இந்திய மாணவர்கள் சீனாவில் படிப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அவர்களின் விவரத்தை சேகரிக்க இந்தியாவிற்கு சிறிது நேரம் ஆகும். தற்போதைய சிக்கலான பெருந்தொற்று காலத்தில் சில இந்திய மாணவர்களை அனுமதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். படிப்பை தொடர்வதற்கு, வெளிநாட்டு மாணவர்கள் சீனா திரும்பும் நிலையில், சர்வதேச பெருந்தொற்று சூழலை கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மாணவர்கள், சீனா திரும்புவது தொடர்பாக, மாணவர்கள் வசதியை ஏற்டுத்தவும், வழிகள் குறித்தும் இந்தியாவில் உள்ள சீன தூதரகம் பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து சீனா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் குறித்த பட்டியலை, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.