ஐபிஎல் கிரிக்கெட் – 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

புனே:
புனேவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 42 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கே.எல்.ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் நிதானமாக ஆடினார். 
அவருக்கு தீபக் ஹூடா ஒத்துழைப்பு கொடுத்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் டி காக் அவுட்டானார். ஹூடா 34 ரன்னில் ஆட்டமிழந்தார். 
அடுத்து வந்த குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ், ஆயுஷ் படோனி மற்றும் ஜேசன் ஹோல்டர் என யாரும் நிலைத்து நிற்கவில்லை. 
இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 153 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 
இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் அணியில் துவக்க வீரரும் கேப்டனுமான மயங்க் அகர்வால் 25 ரன்கள் அடித்தார். ஷிகர் தவான் 5 ரன்னுடன் வெளியேற, ஜானி பேர்ஸ்டோவ் 32 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 
லிவிங்ஸ்டன் 18 ரன்னுக்கு அவுட்டானார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து. 
இதையடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில்  லக்னோ அணி வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.