இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே… பதவி நீக்கம்? மக்களின் நெருக்கடிக்கு அடிபணிந்தார் அதிபர்| Dinamalar

கொழும்பு-மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தன் சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், போராட்டம் அதிகரித்து வருவதை அடுத்து, அரசு நிர்வாகத்திலிருந்து சகோதரர்களை ‘கழற்றி’ விடுவதில் அதிபர் தீவிரம் காட்டி வருகிறார். நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என, பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

‘இதற்குக் காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் தவறான நிர்வாகம்’ எனக் கூறும் பொதுமக்கள், அவர்கள் பதவி விலக வலியுறுத்தி, மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களோடு தொழிற்சங்கங்கள், புத்த துறவிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்தி வருவதால், அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியில், அதிபர் கோத்தபய ராஜபக்சே கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இந்நிலையில், இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான சிறிசேன, அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.

பின், சிறிசேன கூறியதாவது:கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவை விலக்க சம்மதித்துள்ளார்; அனைத்து கட்சியினரை உள்ளடக்கிய புதிய தேசிய கவுன்சில் உருவாக்கவும் ஒப்புக் கொண்டார். தேசிய கவுன்சில், புதிய பிரதமரை தேர்வு செய்யும். அனைத்து கட்சியினர் பங்களிப்புடன், புதிய அமைச்சரவை அமைக்கப்படும்.

இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை மீட்க, அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார். இலங்கையின் நிதி அமைச்சராக பதவி வகித்த, தன் மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்சேவை, சமீபத்தில் அதிபர் கோத்தபய அதிரடியாக நீக்கினார். தற்போது தன் மூத்த சகோதரரான மகிந்தவையும் பிரதமர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது, இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேறிய கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடனும், அதிபர் கோத்தபய நேற்று பேச்சு நடத்தினார். அப்போது, எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தி, இடைக்கால அரசு அமைக்க சம்மதிக்க வைக்கும்படி, அவர்களிடம் அதிபர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, சிறிசேன நேற்று இந்திய துாதரகத்திற்குச் சென்று, துாதர் பக்லேவை சந்தித்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக, தான் நடத்திய பேச்சு குறித்து, அவரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.அதே நேரத்தில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய, மகிந்த ராஜபக்சே மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால அரசு அமைந்தால், அதற்கு தலைமையேற்கப் போவதாகவும் மகிந்த கூறி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.