அடுத்த மாத இறுதிக்குள் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

எரிவாயு தட்டுப்பாடு அடுத்த மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாவ்ப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்குவதாக கூறியுள்ளது. இந்திய அரசின் தலையீட்டுடன் மேலும் பல விநியோகஸ்தர்களை தெரிவு செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன், எரிவாயு கொள்வனவுக்காக உலக வங்கி 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாவ்ப் எரிவாயு தொடர்பாக சந்தையில் உள்ள நிலைவரத்திற்கு ஏற்ப அந்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் எரிவாயு விநியோகத்தின் போது நகர்ப்புற மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு பாவனையாளர்களில் 25 சதவீதமானோர் நகர்ப்புறங்களில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னர், நாளாந்தம் 60,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டன. ஆனால் எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை 30,000 ஆக குறைக்கப்பட வேண்டும் என்றும் லிட்ரோ நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.