காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மசூதியில் குண்டுவெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கலீபா அகா குல் ஜான் மசூதியில், புனித ரமலான் மாத கடைசி வெள்ளியான நேற்று, 100க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்த வந்திருந்தனர்.
அப்போது, மசூதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், உடல் சிதறி 10 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.குண்டுவெடிப்பை தொடர்ந்து, மசூதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
குண்டு வெடிப்பில், அருகில் உள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகள் கடுமையாக குலுங்கின.”இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பதுடன், இதற்கான காரணமும் உறுதியாக தெரியவில்லை,” என, ஆப்கன் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது நபி தாகோர் கூறி உள்ளார்.
Advertisement