சென்னை: அமெரிக்க – இந்திய உறவுகளின் 75வது ஆண்டு கொண்டாட்டம் சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத்தில் உள்ள துணை தூதரங்களில் கொண்டாடப்படுகிறது. மேலும், கடந்த 75 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு வீடியோ பதிவும் வெளிடப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் உள்ள மிகச் சிறந்த மற்றும் திறமையான இந்திய, அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க தூதர் (பொறுப்பு) பாட்ரிசியா லசினா கூறுகையில், ‘‘அமெரிக்கர்களும் இந்தியர்களும் பல்லாண்டுகளாக இணைந்து படித்தபோது, பணியாற்றியபோது, வாழ்ந்தபோது, ஒன்றாக கற்றுக்கொண்டபோது ஏற்பட்ட தனிப்பட்ட நட்புகளில்தான் நமது கூட்டாண்மையின் அடித்தளம் உள்ளது. இந்த வீடியோவில் பங்கேற்றிருப்பவர்கள் தமது துறைகளில் முன்னணியில் இருக்கிறார்கள்.இந்த மக்களுக்கு இடையிலான தொடர்புகள் எங்கள் இரு நாடுகளும் செழிக்க உதவிய பல வழிகளை எடுத்துக்காட்டுகின்றன’’ என்றார். டென்னிஸ் வீரர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ், எழுத்தாளர் மற்றும் உடல்நல வல்லுனர் டாக்டர் தீபக் சோப்ரா உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர். இப்போது இந்தியாவுக்கு மிக அதிகமாக வரும் அயல்நாட்டினரில் அமெரிக்கா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. சுமார் 20,0000 இந்திய மாணவர்கள் தற்போது உயர்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்தி அமெரிக்க பல்கலைக்கழகங்களை வளப்படுத்துகின்றனர். கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது 75வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை தொடரும் வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.