புதுச்சேரியில் படிப்படியாக உயரும் கரோனா பாதிப்பு: புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் படிப்படியாக கரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று இல்லாத மாநிலமாக கடந்த மாதம் 31-ம் தேதி புதுச்சேரி மாறியது. இடையே கடந்த 13-ம் தேதி புதிதாக 2 பேருக்கும், 14-ம் தேதி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 21-ம் தேதி தொற்று இல்லாத மாநிலமாக மீண்டும் புதுச்சேரி இருந்தது.

இதனிடையே, கடந்த 24ம் தேதி புதிதாக 3 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து 25-ம் தேதி ஒருவருக்கும், 26ம் தேதி 3 பேருக்கும், 28-ம் தேதி ஒருவருக்கும் என தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், இன்று புதிதாக 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் கரோனா தொற்று படிப்படியாக உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், “புதுச்சேரியில் 263 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேருக்கும், காரைக்காலைச் சேர்ந்த ஒருவருக்கும் என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஹே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. தற்போது வரை தொற்று பாதிப்புடன் 11 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளர். மற்ற 10 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுவரை மொத்தமாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 63 ஆயிரத்து 815 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 16 லட்சத்து 81 ஆயிரத்து 629 தடுப்பூசிகள் (இரண்டு தவணை) செலுத்தப்பட்டுள்ளது.”இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.