புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கக்கோரி பாவேந்தர் பாரதிதாசன் பேரன் செல்வம் தலைமையில் தமிழறிஞர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பாவேந்தர் பாரதிதாசனின் 132வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. இந்த நிலையில் இன்று புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை மற்றும் தமிழ்மாமணி மன்னர் மன்னன் படைப்பாளர்கள் அறக்கட்டளை சார்பில் போராட்டம் தொடங்கியது.
போராட்டத்தை ஒருங்கிணைத்த பாரதிதாசன் பேரன் செல்வம் கூறுகையில், “பாவேந்தர் பிறந்தநாளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம். புதுச்சேரி அரசு உடனடியாக தமிழ் வளர்ச்சித்துறையை அமைக்க வேண்டும். அனைத்துத் தமிழ் விருதுகளையும் முறைப்படி வழங்க வேண்டும்.
படைப்பாளர்களுக்கு ஊக்கத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை தொடர்பாக சந்திக்க ஆளுநரிடம் அனுமதி கோரி கடிதம் கொடுத்து உள்ளோம்.
இதுவரை 5 முறை கடிதம் வழங்கி இருக்கிறோம். இது வரை எங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை. பெயர் மட்டும் ’தமிழிசை’ என்று வைத்து உள்ளார்கள். ஊர் எல்லாம் தமிழ் முழுக்கம் செய்கிறார்கள். தமிழ் அறிஞர்களை சந்திக்க தயங்குகிறார்கள்.
தமிழறிஞர்களாகிய நாங்கள் என்ன தப்பு செய்தோம். நாங்கள் என்ன பாவம் செய்தோம் அதனால்தான் பாவேந்தர் பிறந்தநாளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை காவித்துண்டுடன் சென்றால்தான் அனுமதிப்பார்களா?” என்று குறிப்பிட்டார்.