பெங்களூரு:கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் இன்று முதல் தடகள போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதால், வீரர், வீராங்கனையர் இறுதி கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர்.
‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளில் இன்று முதல் தடகள போட்டிகள் கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் துவங்குகின்றன. இதற்காக பல்வேறு பல்கலையை சேர்ந்தவர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
சர்வதேச பல்கலை போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் தங்க பதக்கம், தேசிய தடகள வீராங்கனை, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவருமான துாதி சந்த்தும் பயிற்சியில் ஈடுபட்டார். இவர், ஒடிசாவின் புவனேஸ்வர் கே.ஐ.ஐ.டி., பல்கலையை சேர்ந்தவர். இம்முறை பல்வேறு பிரிவுகளில் நடக்கும் போட்டியில் பங்கேற்கிறார்.
துாதி சந்த் கூறியதாவது:இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றேன். ஆசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் வெல்வதே முக்கியம்.பதக்கம் வென்று, பல்கலைக்கு பெருமை சேர்ப்பதே லட்சியம். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வெல்வது குறிக்கோள். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் சீசன்
கேலோ இந்தியா போட்டிகளில், மங்களூரு பல்கலை அதிகபட்ச பதக்கங்கள் பெற்று தடகள பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.இம்முறையும் அதே உற்சாகத்தில் பங்கேற்க தயாராகிறது. தமிழகத்தின் அண்ணா, சென்னை பல்கலை, பாரதியார், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் உடற்கல்வியியல் பல்கலைகளை சேர்ந்த 100க்கும் அதிகமான வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.
ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீலம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் இவர்கள் பங்கேற்கின்றனர்.
Advertisement