“பாகிஸ்தானுடன் நல்லுறவை பேணவே இந்தியா விரும்புகிறது; ஆனால் அதற்கு அந்நாடு முதலில் தீவிரவாத்தை கைவிட வேண்டும்” என்று ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவனே உறுதிப்பட தெரிவித்தார்.
இந்திய ராணுவத் தலைமை தளபதி பதவியில் இருந்து எம்.எம். நரவனே இன்று ஓய்வு பெறுகிறார். அவர் நாட்டின் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் ஆங்காங்கே சில சம்பவங்களை தவிர போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிராக பெரிய அளவிலான நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. பாகிஸ்தானுடன் இந்தியா நல்லுறவை பேணவே விரும்புகிறது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முதலில் தங்கள் நாட்டில் இருக்கும் தீவிரவாதத்தை அது கட்டுப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு சாத்தியப்படும். அதேபோல, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச தளங்களில் எழுப்பும் போக்கையும் அந்நாடு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM