மும்பை :
மும்பையில் உள்ள பைகுல்லா ரெயில் நிலையம் 169 ஆண்டு பழமையானதாகும். இதன் பழமை தன்மையை பாதுகாத்து, அழகுபடுத்தும் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இதில் இன்று ரெயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட, அழகுபடுத்தப்பட்ட பகுதிகள் திறப்பு விழா நடந்தது.
விழாவில் ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தன்வே, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய ரெயில்வே பொது மேலாளர் அனில்குமார் லகோதி, மங்கல் பிரதாப் லோதா எம்.எல்.ஏ., சாய்னா என்.சி. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே பேசியதாவது:-
மகாராஷ்டிராவில் ரெயில்வே திட்டங்களுக்காக பிரதமர் மோடி அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். சமீபத்தில் கூட கொங்கன் ரெயில்வே முழுமையாக மின் வழிப்பாதையாக மாற்றப்பட்டது. மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என நீண்டநாட்களாக பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல ஏ.சி. மின்சார ரெயில் கட்டணத்தை 20-30 சதவீதம் வரை குறைக்க எங்களுக்கு பல பரிந்துரைகளும் வந்தன. தற்போது ஏ.சி. மின்சார ரெயிலுக்கு 5 கி.மீ.க்கு ரூ.65 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ரூ.30 ஆக
இவ்வாறு அவர் பேசினார்.
எனினும் அவர் ஏ.சி. மின்சார ரெயில் கட்டண குறைப்பு எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. மும்பையில் மத்திய, மேற்கு ரெயில்வேயில் தினந்தோறும் சுமார் 80 ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் ஏ.சி. மின்சார ரெயில்களில் வழக்கத்தைவிட கூடுதல் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.