தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாகை மாவட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

நாகப்பட்டினம் அருகே திருச்செங்காட்டாங்குடி  உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பர விழாவின் போது அதன் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த தகவல் அறிந்த முதல்வர், உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு நிதி உதவி அறிவித்து உள்ளர்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியில் இன்று (30.4.2022) அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபன்ராஜ் மீது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும் வழி யிலேயே உயிரிழந்தார் இந்த துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.