பள்ளியில் நடந்த மோதலில் மாணவர் பலி- 11ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் கைது

நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 மாணவர் செல்வ சூர்யாவுக்கும் 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது செல்வ சூர்யாவை எதிர்தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் கற்களால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செல்வ சூர்யா, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே கோஷ்டி மோதல் தொடர்பாக 11ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் தற்போது அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக பாப்பாக்குடி, பள்ளக்கால் புதுக்குடி, இடைகால் உள்ளிட்ட இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரான்சிஸ், பொன்னரசு ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜ குமாரி, சந்திரமோகன் ஆகியோரின் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.