மதுரை: “அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த பணிகளை கவனிக்காமல் உதயநிதியை காக்காப்பிடிக்க அவரை சட்டமன்றத்தில் துதிபாடுவது திமுகவிற்கு ஒரு பின்னடைவுதான்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இது திமுக அல்ல. தேர்ந்தெடுப்பது, பொறுப்புக்கு கொண்டு வரும் முடிவு கட்சித் தலைமைக்குதான் இருக்கிறது. என்னை எதிர்த்து மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு மற்றவர்கள் போட்டியிட்டது குறித்த நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
அமைச்சர்கள் அவர் துறைப் பணிகளை விட்டுவிட்டு, உதயநிதியை காக்காப்பிடிக்க அவரை சட்டமன்றத்தில் துதிபாடுவது திமுகவிற்கு ஒரு பின்னடைவுதான். மக்கள் திமுக மீது கோபத்தில் இருக்கிறார்கள். இது ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. விலைவாசி விஷம்போல் ஏறியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சியின் விவாதங்களை முடக்கப் பார்க்கிறார்கள். திமுக ஆட்சி விளம்பர ஆட்சி. விடியல் தராத ஆட்சி.
கைத்தறி மற்றும் அனைத்து தொழிலாளர்கள் நிரம்பிய மே தினக் கூட்டம் நடைபெறும். நலிந்த தொழிலாளர்களாக உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்படும். இது எந்த இயக்கத்திலும் இல்லை. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் சரியாக நடைபெறவில்லை என்று நகர்ப்புற துறை அமைச்சரிடம் கூறினேன். அவர் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்” என்று செல்லூர் ராஜூ கூறினார்.