இரண்டாவது திருமணம் செய்வதற்காக ஆசிட்டில் எலி மருந்து கலந்து கர்ப்பிணியை கொன்ற கொடூரன்

திருமலை: இரண்டாவது திருமணம் செய்வதற்காக, மனைவியை கொடுமைபடுத்தி, ஆசிட்டில் எலி மருந்து கலந்து கொடுத்து கர்ப்பிணி மனைவியை கொன்ற கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் தண்டாவை சேர்ந்தவர் தருண் (34). இவரது மனைவி மல்காபூர் தாண்டாவை சேர்ந்த கல்யாணி (30). திருமணம் நடந்த ஒரு ஆண்டில் இருந்து கல்யாணியிடம் அதிக வரதட்சணை கேட்டு மாமியார் குடும்பத்தினரும், தனக்கு ஏற்ற ஜோடி நீ இல்லை என தருணும் கல்யாணியை கொடுமை செய்துள்ளனர். மேலும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தருண் கூறி வந்துள்ளார்.இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன் கல்யாணி கர்ப்பமடைந்தார். அதன்பிறகும் தருண் மனைவியை கொடுமைபடுத்துவதை நிறுத்தவில்லை. ‘‘இரண்டாவது திருமணம் செய்யப்போகிறேன் நீ செத்து தொலை’’ என்று அடிக்கடி சண்டையிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கல்யாணியை சரமாரி தாக்கிய தருண், கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டில் எலி மருந்து கலந்து கொடுத்து அவரை நிர்ப்பந்தப்படுத்தி குடிக்கச் செய்துள்ளார். முதலில் மறுத்த கல்யாணி, பின்னர் கொடுமை தாங்க முடியாமல் அந்த ஆசிட்டை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வலியால் அவர் அலறித் துடிக்க தொடங்கியதும் அங்கிருந்து தருண் தப்பியோடினார். கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனிக்காமல் கல்யாணி உயிரிழந்தார். இதுதொடர்பாக கல்யாணியின் பெற்றோர் அளித்த புகாரை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தருணை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.