ஆந்திரா to திண்டுக்கல்: காரில் ரகசிய அறை உருவாக்கி கஞ்சா கடத்தல் – மிரண்டுபோன போலீசார்!

காரில் ரகசிய அறையில் கஞ்சாவை மறைத்து கொண்டுசென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 70கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் இன்று காலை யானைகவுனி காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது, காரில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கஞ்சா வாடை அடித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் சோதனையை மீண்டும் தீவிரப்படுத்தி தேடியபோது, நூதன முறையில் காரில் ரகசிய அறை ஒன்றை உருவாக்கி, அதில் பிளாஸ்டிக் கவரில் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
image
இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், காரில் கஞ்சாவைக் கடத்திவந்த மூன்று பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்குமார், ஸ்டான்லி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த சீனி என்பது தெரியவந்தது. முக்கிய நபரான மோகன் குமார் கடந்த ஒரு வருடமாக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி சாலை மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து, அதன் பின்னர் ரயில் மூலமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு எடுத்துச்சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
image
இதேபோல நேற்று ராஜமுந்திரி பகுதியிலிருந்து ப்ரோக்கரான சீனி மூலமாக கஞ்சா வாங்கிய மோகன் குமார், சீனி மற்றும் ஸ்டான்லியுடன் காரில் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அதன் பின்பு ரயிலில் பார்சல் மூலமாக கஞ்சாவை அனுப்புவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காரில் வரும்போது போலீசாரிடம் சிக்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 70 கிலோ கஞ்சாவை 2 லட்ச ரூபாய்க்கு ஆந்திராவில் வாங்கியதாகவும், அதை 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்வோம் எனவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். கஞ்சா வேட்டை 1.0 வில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ததாகவும், தற்போது கஞ்சா வேட்டை 2.0வில் கஞ்சா நேரடி விற்பனையாளரை கைதுசெய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.