பாட்டியாலாவில் இன்டர்நெட் முடக்கம் ஐஜி உட்பட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்: பஞ்சாப் முதல்வர் மான் அதிரடி

பாட்டியாலா:  பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள காளி மாதா கோயில் அருகே நேற்று முன்தினம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பேரணி நடத்த முயன்றனர். அவர்களை கண்டித்து சிவசேனா (பால் தாக்கரே) கட்சியினரும் போட்டி பேரணி நடத்தினர். இதில், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. வாள், கத்தி போன்றவற்றால் இருவரும் மோதிக் கொண்டனர். கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில், போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாட்டியாலாவில் சிவசேனா கட்சியினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனால்,  காலை முதல் மாலை வரையில் மாவட்டம் முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. மேலும், மோதலை கட்டுப்படுத்த தவறியதற்காக பாட்டியாலா மண்டல ஐஜி, சிறப்பு எஸ்பி, எஸ்பி ஆகியோரை முதல்வர் பகவந்த் மான் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த பதவிகளுக்கு உடனடியாக புதிய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். பாஜ.வும், சில இந்து அமைப்புகளும் சேர்ந்து, வன்முறையை தூண்டி விட முயற்சிப்பதாக மான் குற்றம்சாட்டி உள்ளார். பாட்டியாலாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.