பள்ளியில் நடந்த மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரம் – ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் செல்வ சூர்யாவுக்கும், 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. 
வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது செல்வ சூர்யாவை எதிர்தரப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள் கற்களால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வ சூர்யா சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். கோஷ்டி மோதல் தொடர்பாக 11-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அம்பை அருகே மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்ச்செல்வன், சீபா பாக்கியமேரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.