ம.பி: பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண் – நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், மத்தியப் பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேஷ்வர் கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளார். கோயில் வழிபாடு நிறைவடைந்த பிறகு அந்தப் பெண் புதன்கிழமை இரவு மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரயில் பெட்டியின் இடையில் ஏறிய 30 வயது இளைஞர் ஒருவர், அந்த பொதுப் பெட்டியில் வேறு பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாகத் தெரிகிறது.

ரயில்

அதன்பிறகு அந்தப் பெண்ணிடம் தவறான நோக்கத்தில் அத்துமீறியுள்ளார். அதனால், அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து வெகுதூரமாக ஓட முயற்சி செய்திருக்கிறார். இருப்பினும், அந்த நபர் அந்தப் பெண்ணை துரத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த இளம்பெண், அந்த நபரைக் கையில் கடித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த நபர், ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விட முயற்சி செய்துள்ளார். ரயில் பெட்டியின் கதவுகளை இறுக பற்றிக் கொண்ட அந்தப் பெண் உயிருக்கு வெகுநேரமாக போராடியிருக்கிறார். ஆனால் அந்த நபர் பெண்ணின் கை மீது கடினமாகத் தாக்கியதால், கைநழுவி அந்தப் பெண் ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

அதையடுத்து, அந்தப் பெண் சத்தர்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.