மரியுபோல்:
உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரஷிய படை கைப்பற்றி உள்ளது. அங்குள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்களை வெளியேற்றும் பணி தொடங்கியது.
இன்று அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து 20 பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பெண்கள் உட்பட 20 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் உக்ரைனின் ஜப்போரிஜியா நகரத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று நம்புவதாகவும் வீடியோவில் பேசிய ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் திட்டமிடப்பட்ட வெளியேற்றம் செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும் இன்று நடந்த பணி ஐ.நா. தலைமையில் நடைபெற்றதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. வெளியேற்றப்பட்டவர்களின் நிலை குறித்த உடனடி விவரங்களும் தெரியவில்லை.
இதற்கிடையே, உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்கள் உறவுகள் சிக்கித்தவித்து வருவதாகவும், அந்நகர மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற சர்வதேச தலைவர்கள் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தி கீவ் நகர மக்கள் வீதிகளில் நின்று போராட்டம் நடத்தினர்.