திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையான் கோயில் கட்ட தீர்மானித்து, அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனால், பக்தர்கள் அதிகமுள்ள மும்பை நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை இடத்தில் ஏழுமலையான் கோயில் மற்றும் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.
ஆயிரம் சதுர அடியில் தேவஸ்தானத்திற்கு அங்கு சொந்த இடம் இருந்தாலும் அந்த சிறிய இடத்தில் கோயில் கட்ட முடியாத நிலை இருந்து வந்தது. இதனை அறிந்த மகாராஷ்டிர அரசு, நவி மும்பை பகுதியில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை வழங்க தீர்மானித்தது. இதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு ரூ.500 கோடியாகும். இதற்கான ஆவணங்களை நேற்று மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே திருப்பதிக்கு நேரில் வந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டியிடம் வழங்கினார். இந்த இடத்தில் பிரம்மாண்டமான ஏழுமலையான் கட்ட ரேமாண்ட்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. ரேமாண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவுதம் சிங்கானியா சார்பில் நேற்று இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் சஞ்சீவ் சாரின் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.