சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் விலை கண்காணிப்பு – மத்திய அரசு

புதுடெல்லி,
இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது பாமாயில் ஆகும். நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து 8.3 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்தோனேசிய அரசு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு திடீர் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அதன் விலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொதுவிநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில்  அனைத்து வகையான சமையல் எண்ணெய்கள் போதிய அளவு கையிருப்பில்  உள்ளது. அனைத்து வகை சமையல் எண்ணெய்களின் தற்போதைய கையிருப்பு சுமார் 21 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். மேலும் 12 லட்சம் மெட்ரிக் டன் மே, மாதத்தில் வந்து சேரும். 
இந்தோனேசியாவில் சமையல் என்னை வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலத்தில் தேவையை  ஈடுகட்ட போதுமான அளவு நாட்டில் சமையல் எண்ணெய் வகைகள் கையிருப்பில் உள்ளது. 
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையால்  வெளியிடப்பட்ட இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 20221-22-ம் ஆண்டிற்கான சோயாபீன்ஸ் உற்பத்தி 126.10 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதகமான நிலையை காட்டுவதாக உள்ளது. 
இது கடந்த ஆண்டு உற்பத்தியான 112 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவைக் காட்டிலும் அதிகமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ராஜஸ்தான் உட்பட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பெரிய மாநிலங்களிலும் கடுகு விதைப்பு 37% அதிகரித்ததன் காரணமாக, 2021-22-ம்  பருவத்தில் அதன் உற்பத்தி 114 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயரக்கூடும். 
சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அவற்றின் விலைகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறை கண்காணித்து வருகிறது, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உள்நாட்டு சமையல் எண்ணெய் வகைகளின் விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை மேலும் குறைப்பது குறித்து விவாதிக்க முக்கிய சமையல் எண்ணெய் பதப்படுத்தும் சங்கங்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  
உலகளவில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் நிலவும் பற்றாக்குறை மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஏற்றுமதி வரிகள் அதிகரிப்பு காரணமாக சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகளில் கடும்  அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உலகில் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால்,  இத்துறையில், வேளாண் சார்ந்த  பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ள 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் ஒன்பது பயிரிடப்பட்ட எண்ணெய் வித்துக்களில் 37.14 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.