வீட்டில் திருட முயன்றதாக கூறி இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த கும்பல்; சட்டீஸ்கரில் அதிர்ச்சி

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் வீட்டில் திருட முயன்றதாக கூறி இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை, கும்பல் ஒன்று மரத்தில் தொங்கவிட்டு தலைகீழாக அடிக்கும் வீடியோ ஒன்ற வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்தனர். இதுகுறித்து பிலாஸ்பூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உதவதி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி இளைஞர் மகாவீர் என்பவரை, சிலர் தலைகீழாகத் தொங்கவிட்டு தலைகீழாக அடிக்கும் வீடியோ வைரலான விவகாரத்தில் 15 வயது மைனர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட மகாவீர், மணீஷ் என்பவரின் வீட்டிற்குள் கடந்த ஏப்ரல் 25ம் தேதி இரவு புகுந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்ற போது, மகாவீர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அடுத்த நாள் மீண்டும் அதே வீட்டிற்கு வந்து, வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனால் அவரை தேடிப் பிடித்து மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். திருட முயன்றதாக புகார் அளித்தனர். இருந்தும் மகாவீர் மீது எவ்வித வழக்கும் பதியவில்லை. அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளோம்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.