புதுக் கட்சி தொடங்குகிறார் பிராஷாந்த் கிஷோர்?

இந்திய அரசியல் களத்தில் பிரபல அரசியல் வியூக நிபுணர்
பிரஷாந்த் கிஷோர்
பற்றித்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் அவர். தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோருடன் நெருக்கம் காட்டிய
பீகார்
முதல்வர் நிதிஷ்குமார், அவரை தனது ஐக்கிய ஜனதாதள கட்சியின் தேசிய துணைத் தலைவராக்கினார்.

பீகாரில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி வைத்திருந்தாலும் பல சமயங்களில் அக்கட்சியை விமர்சிக்க பிரசாந்த் கிஷோர் தயங்கியதில்லை. குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவை பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தார். இதுபோன்ற பல காரணங்களால் பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமார் ஆகியோர் இடையே மனகசப்பு ஏற்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரை கட்சியில் இருந்து நீக்கினார் நிதிஷ்குமார். அந்த சமயத்தில் அமித் ஷா பரிந்துரையின் அடிப்படையிலேயே, பி.கே.,வை ஐக்கிய ஜனதாதள கட்சியில் நிதிஷ்குமார் இணைத்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, மேற்குவங்க தேர்தலுக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமூல், தமிழகத்தில் திமுக ஆகிய கட்சிகளுக்கு பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. அந்த தேர்தலில் அவர் உத்தி வகுத்து கொடுத்த கட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனிடையே, “நான் அரசியல் வியூகப் பணி எனும் இந்த தளத்தில் இருந்து விலகப் போகிறேன். ஐபேக் நிறுவனத்தை அதில் இருக்கும் தலைவர்கள் இனிமேல் நடத்துவார்கள். எனது குடும்பத்தினருடன் நான் நேரத்தை செலவிட விடும்புகிறேன்” என்று பிரஷாந்த் கிஷோர் அதிர்ச்சியளித்தார்.

ஆனாலும், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார். இதற்காக பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்களையும்,
காங்கிரஸ்
தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரையும் அவர் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகளை ஒருகுடையின் கீழ் இணைத்து 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த பிரஷாந்த் கிஷோரால் மட்டுமே முடியும் என்று அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதேசமயம், 2024 தேர்தலுக்காக அவர் காங்கிரஸ் கட்சியுடன் அவர் ஒப்பந்தம் போடவுள்ளார் எனவும், அக்கட்சியில் அவர் சேர உள்ளார் என்றும் கடந்த ஆண்டு தகவல் ஒன்று பரவியது. ஆனால், தேர்தல் உத்தியாளரை பற்றிய அந்த தகவல்கள் வெறும் ஊகங்களாகவே மாறிப்போயின. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கலந்து கொண்ட
தேர்தல் உத்தியாளர்
பிரஷாந்த் கிஷோர், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு காங்கிரஸ் கட்சிக்கான ஒரு செயல்திட்டத்தை பற்றி விளக்கினார்.

இதையடுத்து, பிரஷாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர சோனியா அழைப்பு விடுத்ததாகவும், விரைவில் அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரது பேச்சுகளும் இதனை உறுதி செய்யும் வகையில் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து விட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

இதனை உறுதி செய்த பிரஷாந்த் கிஷோர், “அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் சேரவும் மற்றும் தேர்தலுக்கு பொறுப்பேற்கவும் அக்கட்சியின் வாய்ப்பை நான் நிராகரித்து விட்டேன். எனது தாழ்மையான கருத்துப்படி, காங்கிரஸ் கட்சியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சனைகளை சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்ய வேண்டும். அதற்கு என்னை விட அக்கட்சிக்கு தலைமையும், கூட்டு விருப்பமுமே முக்கியம்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த பின்னணியில், மக்களிடம் நேரடியாக செல்லும் நேரம் வந்து விட்டதாகவும், நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்கவுள்ளதாகவும் பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது! தற்போது, பிரச்சினைகளை நன்றாக புரிந்து கொள்ள உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. மக்கள் நல்லாட்சிக்கான பாதைக்கு செல்ல வேண்டிய நேரம் இது. ஷுருஆத் #பிஹார் சே.” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், பிரஷாந்த் கிஷோர் புதிய கட்சித் தொடங்கவுள்ளதாகவும், அவரது அரசியல் பயணம் பீகார் மாநிலத்தில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.