நடிகை சித்ரா தற்கொலை வழக்கு : சிக்குகிறார் 'மாஜி' எம்.எல்.ஏ.,

பெரம்பலுார் : 'டிவி' சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரை, போலீசார் விசாரிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா, 29; தனியார் 'டிவி' சீரியலில் நடித்து வந்த இவர், 2020 டிச., 9ல் செம்பரம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை, அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது தந்தை காமராஜ் கொடுத்த புகார்படி, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சித்ராவின் கணவரை கைது செய்தனர்.

கடந்த 2021 மார்ச் 3ல், ஜாமினில் அவர் வெளியில் வந்தார். நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சகோதரி சரஸ்வதி உள்ளிட்ட பலரிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரித்தனர். சென்னை, பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.

ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அப்போதைய ஆளும் கட்சி முக்கிய பிரமுகர்கள் என்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல், வழக்கை கிடப்பில் போட்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் புகார் மனு கொடுத்தார். அதில், 'என் மனைவியின் தற்கொலைக்கு பின்னணியில் பணம் மற்றும் அதிகார பலம் படைத்த அரசியல், 'மாபியா' கும்பல் உள்ளது.

'சென்னையைச் சேர்ந்த சிலர், அரசியல் பலம் படைத்த நபர்களிடம், பெரிய அளவில் பணம் வாங்க முயற்சி செய்கின்றனர். அதற்கு, என்னையும் உடந்தையாக்க பார்க்கின்றனர். 'ஒத்துழைக்கவில்லை என்றால், உன்னையும் கொன்று விடுவோம்' என, மிரட்டுகின்றனர்' என, தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய, மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவருடன் தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டுள்ளனர்.நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முன், பெரம்பலுாரில், 'கிப்ட் ஷாப்' திறப்பு விழாவில் பங்கேற்றார். அதன் பின், அப்போதைய அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ஒருவரின், தொடர் தொந்தரவே காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

அதனால், அவரை போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து, தீவிரமாக விசாரிக்க உள்ளதாகவும், அரசின், 'கிரின் சிக்னல்' கிடைத்ததும், இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.