சனல் குமார் சசிதரன் Oraalppokkam, ஒழிவு திவசத்தே கழி, செக்ஸி துர்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். மஞ்சு வாரியர் நடித்த Kayattam என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பாக அவரது பேஸ்புக் பதிவில், “மஞ்சு வாரியார் உயிர் ஆபத்தில் இருக்கலாம். அவர் பிணையாக வைக்கப்பட்டுள்ளார். சொந்த முடிவுகளை எடுக்கக்கூட அவரை அனுமதிப்பதில்லை” எனப் பகிர்ந்திருந்தார்.
மேலும் மஞ்சு வாரியர் உடன் Kayattam படப்பிடிப்பின்போது கூட அவரிடம் பேச அனுமதிக்கவில்லை என்றும் பினேஷ் சந்திரன் மற்றும் பினு நாயர் என்கிற இருவரும் மஞ்சு வாரியாரின் மேனேஜர்களாக அறிமுகமாகி படத்தின் எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளர்களாக மாறினர். இவர்களின் பிணையில் தான் மஞ்சு வாரியர் இருப்பதாகவும் 2017 நடிகை தாக்குதல் வழக்கில் மஞ்சு வாரியர் சாட்சி கேட்கப்பட்ட பிறகு விசாரணை அதிகாரி மாற்றப்பட்டதற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்றும் இயக்குநர் சனல்குமார் பதிவிட்டிருக்கிறார்.
நகை கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு கோட்டயத்திற்கு மஞ்சு வாரியர் வந்த போதும் அவரை சந்திக்க சனல் குமார் முயற்சி எடுத்ததாகவும் அதனை மஞ்சு வாரியரின் மேனேஜர்கள் தடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். “படத்தின் ரிலீஸ் சிலரால் தடுக்கப்படுவதைப் பற்றி மஞ்சு வாரியரிடம் பேச முற்பட்டேன். மறுநாள் மஞ்சு வாரியர் எனக்கு அழைத்தபோது நான் பேசும் மனநிலையில் இல்லை. மீண்டும் நான் பல முறை அழைத்தும் பதில் இல்லை. இதுகுறித்து இன்ஸ்டாவில் சிறிய குறிப்பு ஒன்றை வெளியிட்ட மறுநாள் போலீஸ் தரப்பில் இருந்து பேசுவதாகக்கூறி மஞ்சு வாரியர் உங்கள்மீது புகார் கொடுத்திருக்கிறார் என அழைப்பு வந்தது. இது மேலும் எனது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது” என சனல் குமார் பதிவிட்டுள்ளார்.
“மஞ்சு வாரியரின் அமைதி, சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துக்கிறது. WCC-க்கு (மலையாள சினிமாவில் இயங்கும் பெண்களுக்கான அமைப்பு) நான் மெயில் அனுப்பியிருக்கிறேன். தேசியளவில் பிரபலமான நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான இந்த பிரச்னை சீரியஸாக எடுத்து கொள்ளப்பட வேண்டும்” என்கிற கோரிக்கையையும் வைத்துள்ளார்.