எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் மூன்று நாட்களில் ,வழமை நிலைக்கு திரும்பும் என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுமார் மூன்று மாதங்களாக இடம்பெற்று வந்த எரிபொருளுக்கான நீண்ட வரிசைகளை, முடிவுக்கு கொண்டுவருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தற்போது எரிபொருள் விநியோக பணிகள் முழுமைப்பெற்றுள்ளன..ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் எரிபொருள் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை. தரமற்ற எரிபொருள் ஒருபோதும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட மாட்டாது எனவும் எரிபொருட்களின் தரம் தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம் எனவும் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.