முன்னாள் மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்யத் தேர்வு செய்வதாக பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
ஏறக்குறைய 30 வருட திருமண வாழக்கைக்குப் பிறகு மே 2021-ல் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ஆகஸ்ட் 2021-ல் இறுதி செய்யப்பட்டது, ஆனால் தம்பதியினர் தங்கள் அறக்கட்டளையான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை தொடர்ந்து நடத்துவதாக அறிவித்தனர். அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் ஃபோப் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், மே 1 அன்று சண்டே டைம்ஸிடம் பேசிய பில் கேட்ஸ், COVID-19 தொற்றுநோய் மற்றும் அவரது விவாகரத்து என இரண்டு பெரிய விடயங்கள் நடந்தும் கூட கடந்த இரண்டு ஆண்டுகள் ஒரு கனவு போல் கடந்ததாக கூறினார். அனால், அவரது குழந்தைகள் வெளியேறியது தான் மிகவும் வித்தியாசமாக இருந்ததாக கூறினார்.
மேலும், தனது முன்னாள் மனைவியுடனான தனது தற்போதைய பணி தொடர்பான உறவைப் பற்றியும் மனம்திறந்த கேட்ஸ், அவர்களின் திருமணத்தின் முடிவைப் பற்றி அவர் எப்படி உணர்கிறார் என்பதை வெளிப்படுத்தினார்.
தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த போதிலும், அவரது பார்வையில் அது ஒரு “சிறந்த திருமணம்” என்று கூறிய கேட்ஸ், தான் கண்டிப்பாக வேறொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
அப்போது, அவர் மீண்டும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸை திருமணம் செய்து கொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, “ஆம். நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்வேன்.., எனது எதிர்காலத்தைப் பொறுத்தவரை, என்னிடம் எந்த திட்டமும் இல்லை, ஆனால் நான் திருமணத்தை மிகவும் பரிந்துரைக்கிறேன்” என்று கேட்ஸ் கூறியுள்ளார்.
மேலும், அவர் தனது முன்னாள் மனைவியுடன் இன்னும் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்வதாக கூறினார்.
முதலில் அவர்களது திருமணம் ஏன் முடிவுக்கு வந்தது என்பது குறித்து பேசிய அவர், திருமணங்கள் மிகவும் சிக்கலானவை, அதை ஆராய்வது பயன் இல்லை என்று கூறினார். மேலும், தனது விவாகரத்தின் தாக்கம் குறித்து பேசிய அவர், இருவரும் அதிலிருந்து குணமடைந்து வருவதாகக் கூறினார்.