பெண்ணை கொலை செய்த தாய்மாமன்- ஆசைக்கு இணங்காததால் தீர்த்துக்கட்டினாரா?

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா பகுதியில் உள்ளது சாவடிமுக்கு. இங்கு வசித்து வருபவர் ஷாலு (34). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதிலும், 12 வயதிலும் இரு மகன்கள் உள்ளனர். ஷாலு இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவரது தாய்மாமன் அனில் (44). கடந்த 28ந் தேதி மதியம் 2 மணிக்கு ஷாலு தனது நிறுவனத்தில் இருந்து சாப்பிடுவதற்காக வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது ஷாலுவை, அவரது தாய்மாமன் அனில் தடுத்து நிறுத்தினார். திடீரென கத்தியை எடுத்து ஷாலுவை சரமாரியாக குத்தினார். இதில் ஷாலுவின் முதுகு, நெஞ்சு, வயிற்றுப்பகுதியில் கத்திக்குத்து விழுந்தது.

உயிருக்கு போராடிய ஷாலுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு வர்க்கலா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஷாலு பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அனிலை போலீசார் கைது செய்தனர்.

ஷாலுவின் கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால் அவரிடம் தவறாக நடக்க அனில் முயன்று இருக்கலாம், அதற்கு ஷாலு உடன்படாததால் அவரை அனில் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.