விஜய் ஏற்றுக் கொண்டார் அஜித் ஏற்பாரா

நடிகர் அஜித் தனது படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் நடத்துகிறார். இதனால் இங்குள்ள சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் உடனான பிரச்னை தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.

அவர் கூறுகையில், ‛‛தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பாக சென்னையில் நாளை(மே., 4) பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என நம்புகிறேன். நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மே 8ல் நடப்பதால் அன்றைய தினம் சென்னையில் எந்த படப்பிடிப்பும் நடக்காது.

நடிகர் அஜித் தனது படங்களின் படப்பிடிப்பை தொடர்ச்சியாக ஐதராபாத் மற்றும் பிற மாநிலங்களில் நடத்துவதால் இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைக்கிறோம். இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூருக்கும் இதே வேண்டுகோளை வைக்கிறோம். தற்போது சென்னையிலேயே அனைத்து வசதிகளும், தேவையான பாதுகாப்புகளும் உள்ளன. இதே கோரிக்கையை நடிகர் விஜய்யிடம் வைத்தோம். அவர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.